Thursday 20 November 2014

போதைக் கடத்தல் மரண தண்டனை: ஐவருக்கு பாவமன்னிப்பு! மூவர் சிறையில், உறவினர் பரிதவிப்பு!!

ராஜபக்சவின் `மனிதாபிமானம்`,
ஐவர் இந்தியர்! மூவர் இலங்கையர்!!

இலங்கை கடல் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், பி.அகஸ்டஸ், ஆர்.வில்சன், கே. பிரசாத், ஜே. லாங்லேட் ஆகிய இந்திய மீனவர்களும்,குருநகர் மற்றும் மண்டை தீவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய மூவரும் அடங்கிய எண்மர் ,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிராக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக  இலங்கை அதிகாரிகளால் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இலங்கை நீதி மன்ற வழக்கு விசாரணையில் இவர்கள் எண்மருக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 30ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நீதி மன்றத் தீர்ப்பை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீனவர்களும்,அரசியல் கட்சிகளும்,புரட்சிகர அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 தமிழக மீனவர்களையும் விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.

இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் இந்தியத் தூதரகம் சார்பில் கடந்த 11ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவுடன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, 5 தமிழக மீனவர்களையும் இந்தியாவுக்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆராய்வதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் ராஜபட்ச உறுதி அளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இலங்கை வெலிகடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 5 தமிழக மீனவர்களும் புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை அதிபர் என்ற முறையில் தனக்குள்ள மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, 5 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து இலங்கை சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், "இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக, 5 பேரும் குடியேற்றத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்' என்றனர்.

அவர்கள் 5 பேரும் வியாழக்கிழமை (நவ.20) அல்லது வெள்ளிக்கிழமை (நவ.21) நாடு திரும்புவார்கள் என இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபட்சவுக்கு இந்தியத் தூதர் நன்றி: 
5 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டதற்கு, ராஜபட்சவுக்கு கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும், இந்திய தூதர் ஒய்.கே. சின்ஹாவும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கொழும்பு உயர் நீதிமன்றத்தால் கடந்த மாதம் 30ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய (தமிழக) மீனவர்கள் 5 பேரும், இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர் என்பதை உறுதி செய்கிறோம்.
மனிதாபிமான அடிப்படையில், இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்ச மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது நடவடிக்கையால், இந்தியா-இலங்கை இடையிலான பன்முகத்தன்மைக் கொண்ட உறவு மேலும் வலுப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும், சார்க் எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நேபாளத்தில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், ராஜபட்சவும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், 5 தமிழக மீனவர்களையும் இலங்கை விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
===============



மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ் மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று யாழ்ப்பாண மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே குற்றச்சாட்டுக்காக – ஒரே வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எட்டு மீனவர்களில் ஐந்து பேருக்கு மட்டும் சிறிலங்கா அதிபர் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார்.
எனினும், இந்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், குருநகர் மற்றும் மண்டைதீவைச் சேர்ந்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில், இதுகுறித்து உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான, மண்டைதீவைச் சேர்ந்த கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜின் மனைவி மரியபுளோரன்ஸ் இதுகுறித்து பிபிசியிடம் தகவல் வெளியிடுகையில்,

“எனது கணவருடன்( கிறிஸ்துராஜா ஹில்மட்ராஜ்), குருநகரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் துஷாந்தன், கமல் கிறிஸ்டி ஆகிய மூவருக்கும், ஐந்து இந்திய மீனவர்களுடன் தண்டனை வழங்கப்பட்டது.

இந்திய மீனவர்கள் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்படும் போது எங்கள் கணவன்மாரையும் விடுதலை செய்யாதது ஏன்?

அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு விடுதலை செய்யாவிட்டால் நாங்களும் தூக்கில் தொங்குவதைவிட வேறு வழி எங்களுக்கு இல்லை.

இவர்களை விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்த்துத்தான் நாங்கள் கடந்த மாதம் 30 ஆம் திகதி நீதிமன்றத்திற்குப் போயிருந்தோம்.

ஆனால் அவர்களுக்கு மரண தண்டனை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

இப்போது அவர்களுடன் தண்டனை வழங்கப்பட்ட இந்திய மீனவர்களை பொதுமன்னிப்பு என்று விடுதலை செய்துவிட்டார்கள்.ஆனால் எங்கள் உறவுகளைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.

எனக்கு ஒரு மகன் இருக்கின்றார். எனது கணவரை நம்பித்தான் நாங்கள் வாழ்கின்றோம். அவர்கள் இல்லாமல் எங்களால் வாழ முடியாது”, என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பு: ஊடகச் செய்திகளில் இருந்து தமிழீழச் செய்தியகத் தொகுப்பு.

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...