Monday 3 April 2017

போர்க்குற்றச் சிங்களமே ஈழப்போராளி தேவதாசனை விடுதலை செய்!


தேவதாசன் குறித்து ஒரு பதிவு:

2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பங்களிலேயே "சலனச்சித்திரம்" என்னும் சினிமா இயக்கத்தை ஆரம்பித்து சினிமா மீது காதல் கொண்டு அலைந்து கொண்டிருந்த பல தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு சினிமாவைக் கற்பித்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் விளங்கிய தேவதாசன் அவர்கள் கோட்டை புகையிரத நிலையக் குண்டுத் தாக்குதலுக்கு உதவியதாக 2009ம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார். விசாரணை இன்றி ஏழு வருடங்களுக்கு மேலாக சிறையில் வைக்கப்பட்ட அவர் சிறைக்குள்ளிருந்து தனக்காகத் தானே போராடியதன் விளைவாக அவருடைய வழக்கு விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு:

20 வருடகால சிறைத் தண்டனை.

நான் 9 ம் வகுப்பு படிக்கிற காலத்தில் முதன் முதலாக தேவதாசன் அவர்களை பார்க்க கிடைத்தது. "தமிழீழ மக்கள் புரட்சி பேரவை" என்னும் தீவிர இடதுசாரி இயக்கத்தை ஆரம்பித்து என் போன்ற இளைஞர்கள் (மனித உரிமைவாதிகளின் மொழியில் "சிறுவர்கள்") மத்தியில் அரசியல் வகுப்புகள் எடுத்து கொண்டிருந்தார் - கூடுதலாக வரமராட்சிப் பிரதேசத்தில்.

புலோலியில் ஒரு வீட்டில் இரகசியமாக நடந்த அவருடைய ஒரு அரசியல் வகுப்பில் நானும் பங்குபற்றினேன். அப்போ ஹாட்லி கல்லூரியில் எனக்கு சீனியராக இருந்த சில மாணவர்கள் இந்த இரகசிய அரசியல் வகுப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிறைய மாணவ, மாணவிகள் கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கங்களுக்கு ஓடிக் கொண்டிருந்த சீசன் அது. புலிகளை தவிர ஏனைய பெரிய இயக்கங்கள் அனைத்தும் சிறுவர்களை ஆயுதப் பயிற்சிக்காக
அள்ளுகொள்ளையாக அள்ளிக் கொண்டிருந்தார்கள். எந்த அரசியல் விழிப்புணர்வும் இல்லாமல் மாணவர்கள்/சிறுவர்கள் இயக்கங்களுக்கு அவ்வாறு ஓடுவதை ஓரளவு குறைத்தது தேவதாசன் போன்றவர்களின் அரசியல் வகுப்புகள்.

அதன் பின்னர், 18 வருடங்கள் கழித்து அவரை நான் கொழும்பில் 2001ம் ஆண்டு சந்தித்தேன். அதே கம்பீரம். அதே உறுதியான பேச்சு. அதே இலட்சிய மனம். ஆனால் துறை மட்டும் மாறியிருந்தது.
ஆம்....
அப்போது அவரும் என்னை போன்றே ஒரு சினிமா செயற்பாட்டாளனாக மாறியிருந்தார்.
ஆனால் அவர் என்னை விடவும் "மொக்கு தனமாக" இருந்தார்.

ஆம், சில ஆளுமைகள் அவ்வாறுதான் படைக்கப்படுகிறார்கள். அவர்களால் "பொதுவேலை" செய்யாமல் இருக்க முடியாது. பொது வேலைக்காக எந்த உச்ச ஆபத்தையும் எதிர் கொள்ளவும் தயங்க மாட்டார்கள்
அத்தகையவர்கள்.

தேவதாசன் அவர்களின் பின்னால் பெரும் இளைஞர் பட்டாளம் ஒன்று யாப்பாணத்திலும், வவுனியாவிலும், கொழும்பிலும் இயங்கிக் கொண்டிருந்தது. அடிப்படை சினிமா அறிவு ஏதும் இல்லாமல் சினிமா செய்ய வெளிக்கிட்ட பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் தன்னால்
 முடிந்தளவு அடிப்படை சினிமா அறிவை வழங்கிக் கொண்டிருந்தார்.

பின்னர் தன் சொந்த பிரயத்தனத்தின் ஊடாக "இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்" பணிப்பாளர் சபையில் அங்கத்தவரானார். அவருடைய முயற்சியில் உருவானதுதான் இலங்கை திரைப்படக்
கூட்டுத்தாபனத்தின் "தமிழ் பிரிவு".
உண்மையில் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் என ஒன்று உள்ளது, என எம்மவர் பலருக்கு அறிமுகம் செய்தவரே அவர்தான்.

என்னுடைய சினிமா செயற்பாட்டுக்கும் தேவதாசன் அவர்களின் சினிமா செயற்பாட்டுக்கும், சினிமா பற்றிய புரிதலுக்கும் கூட பாரிய வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருந்தன.

ஆனால் தமிழ் பேசும் இளைஞர்கள் மத்தியில் சினிமா செய்வதற்கான தைரியத்தை கொடுத்ததில் தேவதாசன் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. அதற்காக அவர் இழந்தது பல. அதற்கான அவரது உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நாம் மறந்துவிட முடியாது.

பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் "குற்றவாளிகள் அல்ல" என தீர்ப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

சந்தர்ப்பவசமாக "பயங்கரவாத" செயற்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட தேவதாசன் போன்ற சமூகச் செயற்பாட்டாளர்கள், கலைஞர்களுக்கு...

20 வருட கடும் சிறைத் தண்டனை.

"அவர்களும் எம்மை கொன்றார்கள், நாங்களும் அவர்களைக் கொன்றோம். கணக்குச் சரியாப் போச்சிது. நடந்ததை மறப்போம்" என பேரினவாத பயங்கரவாதத்தையும், தமிழர் விடுதலைக்கான ஆயுத
போராட்டத்தையும் சமப்படுத்திக் கொண்டிருக்கும் சனநாயகவாதிகளும் சரி.... மனித நேய சக்திகளும் சரி....
இன்று சினிமா "ஜாம்பவன்களாக, நட்சத்திரங்களாக, பிரபல்யங்களாக..." வர துடித்துக் கொண்டிருக்கும் ஈழம் சினிமா கலைஞர்களும் சரி....
யாருக்கும் தோன்றவில்லை...
இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க,
நீதிக்காக குரல் கொடுக்க...

நாம், "நாமுண்டு நம் நலமுண்டு" என இப்படியே இருப்போமாயின் நம்மையும் இந்த உலகம் இலகுவில் மறந்து விடும்.

நன்றி:ஞானா

No comments:

Post a Comment

Israel assassinate 18 IRGC members since December!

Israel strikes Iran consulate in Syria’s capital Damascus:  What we know Iran has promised a response after an alleged Israeli attack on its...